Saturday 31 December 2016

அமெரிக்காவின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் - இமாம் சயீத் சாகிர்

இமாம் சயீத் சாகிர் அமெரிக்காவிலுள்ள முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்காவின் முதலாவது இஸ்லாமியப் பல்கலைக்கழகமான செய்த்தூனா கல்லூரியின் ஸ்தாபர்களில் ஒருவருமாவார். அத்துடன் 2009 ஆம் ஆண்டு  "மாற்றத்திற்கான ஒன்றியம்" என்ற அமைப்பை ஸ்தாபித்து, அதன் தலைவராக செயற்பட்டு வருகிறார். அந்த அமைப்பின் மூலம் நவீன சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து மக்களிடையே பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



இமாம் சயீத் சாகிர் அவர்கள் 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள, பெர்கெலே எனுமிடத்தில் பிறந்தார்கள். இவர்களது இயற்பெயர் ரிக்கி டார்லி மிச்சல் என்பதாகும். இவர்களின் ஆரம்ப வாழ்க்கை வட கிழக்கு அமெரிக்காவிலுள்ள கனெடிகட் பிரதேசத்தில் கழிந்தது. அங்கு வீடமைப்புத்திட்டங்களில் பணியாற்றினார்கள். அங்கு பெற்ற அனுபவம் அவர்களுக்கு சமூக, பொருளாதார மாற்றங்களை எதிர்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொடுத்தது. 1977 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அக்காலப்பகுதியிலேயே புனித இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை சயீத் சலீம் சாகிர் என்று மாற்றிக்கொண்டார்கள்.

இவர்கள் வொசிங்டனிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் கற்கையில் கலைமானிப்பட்டம் பெற்றார்கள். ருட்கேர்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுமானிப் பட்டம்; பெற்றார்கள். பின்னர் தனது இஸ்லாமியக் கற்கைகளுக்காக சிரியாவுக்குச் சென்றார்கள். அங்கு ஏழு வருடங்களும், சிறிது காலம் மொரோக்கோவிலும் கற்றார்கள். இமாமவர்கள் அரபு, பிக்ஹ், குர்ஆனியக் கற்கைகள் ஆன்மீகம் போன்றவற்றை பெரும் அறிஞர்களான அப்துர் ரஹ்மான் அல் சஹுரி, ஷெய்க் முஸ்தபா அல் துர்க்மானி போன்றவர்களிடம் கற்றார்கள். 2001 இல் சிரியாவின் அபூ நூர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகளுக்கான கலைமானிப் பட்டம் பெற்றார்கள். அப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் அமெரிக்கரும் இமாம் சயீத் சாகிர் ஆவார்கள்.

2003 ஆம் ஆண்டு கலிபோர்னியாவிலுள்ள செய்த்தூனா நிறுவனத்தில் அரபு, பிக்ஹ் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றைக் கற்பிக்கத்தொடங்கினார்கள். 2004 இல் கல்லூரியினுள்ளே ஒரு முன்னோட்ட திட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அதாவது நான்கு வருட கற்கை நெறியொன்று ஒத்திகைக்காக ஆரம்பிக்கப்பட்டது. அதனது வெற்றியைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பெர்கலே எனும் இடத்திற்கு மாற்றப்பட்டு முஸ்லிம் சுதந்திரக் கலைகளுக்கான கல்லூரியாக செய்த்தூனா கல்லூரி மாற்றம் பெறுகிறது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் தோன்றிய நிலைமை பற்றிக் கூறும்போது, "9/11 தாக்குதலைப் புரிந்த அறிவற்ற மிருகத்தனம் மிக்கவர்களினது செயலின் விளைவினை முழு உலக மக்களும் அனுபவிக்கிறார்கள். எங்களது சிறந்த எதிர்பார்ப்பானது வலி, முரண்பாடு, வெறுப்பு கட்டவிழ்த்துப்படுதல் என்வற்றுக்கு அப்பால் செல்வதாகும். எங்களால் செய்ய முடியுமானது எமது சக்தியின் மீதும் அல்லாஹ்வின் வாக்குறுதி மீதும் நம்பிக்கை வைப்பதாகும்."

2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் இமாம் சயீத் சாகிர் அவர்களும் ஒருவராவார். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் "முஸ்லிம் - கிறிஸ்தவ புரிந்துணர்வுக்கான இளவரசர் அல் வலீத் பின் தலால் நிலையம்" இமாம் சயீத் சாகர் அவர்களை செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞராக அழைத்தது. புகழ் பெற்ற டைம் சஞ்சிகை அவர்களை "முன்னணி அறிவொளி" என வர்ணித்தது.

அத்துடன் டிக்கன் டெய்லி சஞ்சிகை, "இன்று உண்மையான முறையில் இஸ்லாத்தினை எடுத்துரைக்கும் சிறந்த அறிஞர்களுள் ஒருவராவார்" என்று கூறியுள்ளது.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை - 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2016




அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இப்பதவியானது நிரந்தரமானதும், ஓய்வூதியம் உள்ளதுமான அரச தொழில் ஆகும். 

சென்ற முறைகளில் பரீட்சையில் போதிய வெட்டுப்புள்ளியினைப் பெறத் தவறியவர்களுக்கும், பரீட்சையைத் தவறவிட்டவர்களுக்கும் இது ஓர் மற்றுமொரு வாய்ப்பாகும்.

இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (16/12/2016) வெளியாகியுள்ளது. கீழுள்ள இணைப்பில் அதனைப் பார்வையிடலாம்.

https://archives.dailynews.lk/2001/pix/GazetteT16-12-16.pdf