Saturday 13 September 2014

இலங்கை: முஸ்லிம் விரோத சக்திகளின் மைதானம்




இலங்கை: முஸ்லிம் விரோத சக்திகளின் மைதானம்
Aluthgama1
(லதீப் பாரூக்)
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக, சிங்களவர்களைத் தூண்டும் நோக்கில் இடம்பெற்று வருகின்ற விஷமப் பிரசாரம், நான்கு ஆண்டுகள் முன்பு வரைக்கும் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது. பேருவளையிலும், அளுத்கமயிலும் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், முஸ்லிம் வசிப்பிடங்கள் மற்றும் வியாபர ஸ்தலங்கள் என்பன எதுவித காரணமும் இல்லாமல் எரிக்கப்பட்டு, நாசமாக்கப்பட்டு, கோடிக் கணக்கான ரூபாய்கள் நஷ்டமாக்கப்பட்டதையும் ஜாதிக ஹெல உருமய போன்ற சக்திகள் நியாயப்படுத்தும் அளவுக்கு நிலமை இன்று மோசமாகியுள்ளது.
சர்வதேச ரீதியாக நிலவி வரும் இஸ்லாமோபோபியா (Islamophobia) என்கிற இஸ்லாம் குறித்த பீதியை இவ்விதம் இலங்கைக்கு இறக்குமதி செய்தவர்கள் யார்?
முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் இஸ்ரேலிய சதி என சந்தேகிப்பதற்கு எல்லாவிதமான காரணங்களும் இருக்கின்ற போது, அளுத்கம, தர்கா நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், இஸ்ரேல், இந்தியாவின் RSS, மியன்மார் அஷின் விராது தேரரின் 969 இயக்கம் என்பவற்றின் பின்னணி இருக்கின்றது என்று கருதுவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன.
இதனை வலுப்படுத்தும் வகையில், சிங்கள நாளிதழான திவயின கடந்த 5ஆம் திகதி, நாட்டில் இடம்பெறும் மத வன்முறைகளின் பின்னணியில், இஸ்ரேல் மற்றும் நோர்வே என்பன இருப்பதாகக் குற்றம் சுமத்தி உள்ளது.
2009 இல் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு, அதுவரை காலம் உள்நாட்டுப் போரால் தாம் அடைந்திருந்த காயங்கள் இனியாவது தீரும் என முஸ்லிம்கள் பெருமூச்சு விட்டார்கள். மூன்று தசாப்த யுத்தத்தின் காயங்களில் இருந்து, பாடம் படித்ததன் மூலம், இனியாவது எல்லா சமூகங்களினதும் சிறந்த எதிர்காலத்திற்கான நடவடிக்கைகள் முன் கொண்டு செல்லப்படும் என ஏக்கப் பெருமூச்சு விட்டார்கள்.
ஆனால், இந்தக் கனவு தகர்ந்து போனது. அரசாங்கத்தில் பெரும் செல்வாக்கு செலுத்திய நவ பாஸிஸ்டுகள், சிறுபான்மையினரை காலடியில் போட்டு மிதிப்பதன் மூலம், சிங்கள சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன்தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சிறுபான்மையினரை புறம்தள்ளிவிட்டு, சாத்தியமான எல்லாத் துறைகளிலும் சிங்கள மயமாக்கல் ஆரம்பமானது. முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் பெயர் போன சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளுடன் இவர்கள் கைகோர்த்துக் கொண்டார்கள்.
எனவே, அரச ஆசிர்வாதத்துடன் முஸ்லிம் விரோத வெளிநாட்டு சக்திகள், முஸ்லிம்களைத் துன்புறுத்தி, அவர்களை படுகொலை புரியும் தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களுடனும், நாட்டுக்குள் பிரவேசித்தன.
அரசாங்கம் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளை ஆரம்பிக்கத் துவங்கிய போது, “சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டும் விஷமப் பிரசாரம் ஒன்று எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்” என அப்போது என் ஆக்கம் ஒன்றில் எழுதி இருந்தேன்.
சர்வதேச ரீதியாக இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரல் எல்லா இடங்களிலும் இவ்வாறுதான் இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஆக்கத்தில், இஸ்ரேல் இந்நாட்டில் நிலை கொள்வது மிக அபாயகரமானதாகும் என அப்போது எதிர்வு கூறி இருந்தேன். அக்கட்டுரைகளில் இருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்.
“இஸ்ரேலுடன் வளர்ந்து வருகின்ற நாட்டின் உறவு, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குள் சீரியஸான கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, இது தமக்கு அபாயகரமான விளைவுகளைக் கொண்டு வரும் என முஸ்லிம்கள் ஆழமான கவலைகளைக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் முஸ்லிம்களுக்கு எதிரான நீண்ட கால எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் உலகளவில் முஸ்லிம் சமூகத்தை ஒடுக்குவதற்கும், அழிப்பதற்கும் எடுக்கப்பட்டு வருகின்ற முயற்சிகளில் இஸ்ரேலின் பங்கு என்பவற்றின் காரணமாகவே இப்பயம் உருவாகியுள்ளது.
பூரண அதிகாரங்களையும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடும் இல்லாத, ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ‘சர்வதிகாரத் தலைமைத்துவத்தின்’ கீழ், முஸ்லிம் தலைமைகள் எதையும் செய்வதற்குக் கையாலாகமல் இருந்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் கவனத்தை ஈர்ப்பதாகின்றது”.
“இரவு நேரத் திருடர்களைப் போல் நாட்டிற்குள் நுழைந்து, அரசியல்வாதிகள் சிலரைக் கூலிக்கு அமர்த்துவதற்கு மேலாக, மீடியா, அரசாங்கம், வியாபாரத் துறை மற்றும் இன்ன பிற துறைகள் என, எப்போதும் போல் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.
“அண்மைய ஆண்டுகளில் அமைச்சர்கள், அரச மற்றும் தனியார் துறை சார் உயர் அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் என இஸ்ரேல் செல்கின்றவர்களின் தொகை அதிகரித்துள்ளமையும், இஸ்ரேலிய “முதலீட்டாளர்கள்” முதலீடு செய்கின்ற வீதம் அதிகரித்துள்ளமையும், வளர்ந்து வருகின்ற இவ்வுறவை எடுத்துக் காட்டுவதாக உள்ளன”.
இந்நிலையில், அடிக்கடி எழுப்பப்படுகின்ற வினா, முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உருவாக்கத் தேசியவாதிகளையும், கடும்போக்குவாதிகளையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ளாது என்று கூறுவதற்கு, என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதுதான். இதனால், இனங்கள் இடையிலான உறவில் விரிசல்களைத் தோற்றுவித்து, இனப்பிரச்சினையை மேலும் சிக்கலானதாக இஸ்ரேலின் பிரசன்னம் மாற்றி விடுமோ என முஸ்லிம்கள் அஞ்சுகிறார்கள். கிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இடையில் ஏற்பட்ட விரிசல்களின் பின்னணியில், இஸ்ரேல் இருந்திருப்பதாகவும் வேறு ஏற்கனவே பரந்து பட்ட அளவில் ஊகங்கள் நிலவுகின்றன”.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என ஓர் உதாரணத்துடன் ஆக்கமொன்றில் நான் தெளிவுபடுத்தி இருந்தேன். “Milli Gazette என்கிற புது டில்லியைத் தளமாகக் கொண்ட பத்திரிகை (டிசம்பர் 1- 15, 2009) தருகின்ற தகவல்களின் படி, முஸ்லிம்களுக்கு எதிராக மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கு பெருமளவிலான பணத்தை, ஐரோப்பா ஊடாக இஸ்ரேல், பல்வேறு தீவிர ஹிந்துத்துவ அமைப்புக்களுக்கு வழங்கி இருக்கின்றது. 2008 இல் மட்டும் 7877 கோடி இந்திய ரூபாய்கள் இவ்விதம் கைமாற்றப்பட்டுள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் இந்திய சமூக- அரசியல் சூழலை விஷமூட்டும் வகையில் செயற்படுகிறார்கள், இதற்கு இஸ்ரேல் உதவி புரிகின்றது’ என்று நிலவி வந்த நம்பிக்கைக்கு, விசாரணைகள் மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதாக இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
இலங்கை- பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இஸ்ரேலை நாட்டுக்குள் அனுமதித்தமை, விடயம் தெரிந்த முஸ்லிம்கள் பலரை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜனாதிபதியை இஸ்ரேலுக்கு விஜயம் செய்யுமாறு ஆர்வம் ஊட்டுகின்ற விடயத்திலும், இஸ்ரேல் வெற்றி பெற்றது. இது இலங்கையில் இஸ்ரேல் எந்தளவு வெற்றி பெற்றுள்ளது என்பதையே காட்டுகின்றது.
கடந்த சில ஆண்டுகளில், மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட பிரசாரங்கள் மூலம், அப்பாவிச் சிங்களவர்களின் மனதுகள் மிகவும் முறையாக விஷமப்படுத்தப்பட்டன. பௌத்த பிக்குகளும், பௌத்த விகாரைகளும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம் ஆடை முறை கண்டிக்கப்பட்டது. தமது இருப்பையே அபாயத்திற்கு உட்படுத்துவது போன்று, முஸ்லிம்களின் வியாபார நிலையங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன.
முஸ்லிம் விரோதத்தைப் பரப்புவதற்காக அப்பட்டமான பொய்களைக் கூட கற்பனை செய்கின்ற அளவுக்கு பௌத்த பிக்குகள் தள்ளப்பட்டார்கள். “முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்கும் போது, முஸ்லிம்கள் எப்போதும் மூன்று முறை, அந்த உணவிலோ அல்லது பானத்திலோ துப்புகிறார்கள்” என்றும், இது குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றது என்றும், பௌத்த பிக்கு ஒருவர் கதை அளந்தார்.
அநுராதபுரத்தில் தர்கா ஒன்று, பொலிசாரின் கண் முன்னிலையிலேயே தகர்க்கப்பட்டதே இந்த நவீன அத்தியாயத்தின் ஆரம்பமாகும். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தவறியது. இவ்வினவாத சக்திகள் இவ்விதம் மூக்கணாங்கயிறு இல்லாமல், தொடர்ந்து இயங்குகின்ற பட்சத்தில், இலங்கை இன்னொரு மியன்மாராகி விடும் என்று அப்போது எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டன.
அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற இடங்களில், முஸ்லிம்கள் மீது பயிற்றப்பட்ட குண்டர்கள் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம், இவ்வெதிர்வு கூறல் இன்று உண்மையாகியுள்ளது. சரி, இந்த குண்டர்கள் யார்?
இவ்வினவாத கொலைப் படையை இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொஸாட்டே பயிற்றுவித்திருப்பதாக பலர் சந்தேகிக்கிறார்கள். விவசாயப் பயிற்சி என்ற பெயரில், பெரும் ஆரவாரத்துடன் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டவர்களே இவர்கள் என்றும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் இதற்கு அரச ஆசிர்வாதம் உண்டு எனவும், அரசாங்க வட்டாரத்திற்குள் கூட சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதற்கு மத்தியில், இந்திய முஸ்லிம் விரோத அமைப்புக்களான, RSS, BJP, VHP, சிவ சேனா, பஜ்ரன் தால் போன்ற பல அமைப்புக்களுடனும் இலங்கை இரகசியத் தொடர்புகளை ஆரம்பித்தது. அவற்றின் பிரதான நிகழ்ச்சி நிரலான ஹிந்து ராஜ் ஒன்றை இந்தியாவில் நிர்மாணிக்கும் முயற்சியில், தடை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இஸ்லாத்தை இல்லாதொழித்து, முஸ்லிம்களை நசுக்குவதுதான் இவர்களுடைய முக்கிய நோக்கம் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
கடந்த ஜூன் 15 ஆம், 16 ஆம் திகதிகளில், அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையிலும் கூட, பொது பல சேனாக் குண்டர்கள் நடாத்திய தாக்குதல்கள், 1947 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியாவில் கட்டவிழ்த்து விட்ட சகல வன்முறைகளுடனும் ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றன.
இந்த சக்திகள் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்யவும் ஆரம்பித்தன.
உதாரணமாக, அரசாங்க நிறுவனம் ஒன்றின் மூலமாக அழைக்கப்பட்டிருந்த மனிபால் பல்கலைக்கழக பேராசியர் ஒருவர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நெஹ்ரு முதல், மன்மோகம் சிங்க் வரையான இந்தியத் தலைவர்கள் அனைவரையும் கண்டித்து, நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளினார். இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் அவரிடம்தான் தீர்வு உள்ளது போன்று கதைத்தார். (2002 குஜ்ராத் கலவரத்தின் பின்னணியில் இருந்ததாக நரேந்திர மோடி மீது பலமான குற்றச்சாட்டுகள் உண்டு).
கலந்துரையாடலை நிறைவு செய்கின்ற தருவாயில், வஹ்ஹாபியப் பயங்கரவாதம் குறித்த அபாயத்தை இலங்கைக்கு எச்சரிக்கவே தான் இங்கு வந்ததாகவும், வஹ்ஹாபியப் பயங்கரவாதம் இன்னும் ஒரு பிரச்சினையாக உருவாகி இல்லாவிட்டாலும், அது வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆண்டு காலப் பகுதியில், ஒரு பெரும் பிரச்சினையாக அது உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதனையும் எடுக்காவிட்டால், இலங்கை பயங்கரவாதத்தை பரிவர்த்தணை செய்கின்ற தளமாக மாறி விடலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
தனது குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு நான் அவரிடம் கேட்ட போது, தனது நேரமில்லை என ஓடி விட்டார்.
இதற்கு மத்தியில், மியன்மார் (முன்னை நாள் பர்மா) இரத்தத் தாகம் பிடித்த பௌத்த பிக்கு அஷின் விராதுவுடனான பொது பல சேனாவின் குசலம் ஆரம்பமாகிறது. இவரது 969 இயக்கமே ரோஹிங்யா பிராந்தியத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை அறுத்துப் படுகொலை செய்தது. அவ்வாறான அமைப்பு ஒன்றுடனான பொதுபல சேனாவின் உறவு, இலங்கையில் இதனை ஒத்த ஒரு நிகழ்வையே எதிர்வு கூறுகின்றது. ஒரு போதும் மீள முடியாத அளவு கொலைக் களமாக இலங்கையை மாற்றி விடுவதற்கான எல்லா விதமான கூறுகளையும், இந்த அபாயகரமான கூட்டணி கொண்டிருப்பதாக இலங்கை முஸ்லிம்கள் அஞ்சுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான், அளுத்கமயிலும், அதனை சூழவும் உள்ள முஸ்லிம்கள் மீதான தாக்குதல் இடம்பெறுகிறது. இத்தாக்குதல் முஸ்லிம் விரோதப் பிரசாரத்தின் முடிவாக இருக்குமா? அல்லது ஆரம்பமாக இருக்குமா? என்பதே இப்போது எஞ்சி நிற்கின்ற கேள்வியாகும்.

நன்றி : மீள் பார்வை

No comments:

Post a Comment