Sunday 10 May 2015

கலாநிதி தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி)

ஈழத்து மண்ணில் உதித்த தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முதலாவது அரபி அல்லாத முஸ்லிம் விரிவுரையாளருமான,
கலாநிதி தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி)
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அக்கரைப்பற்றில் 1956 ஆம் ஆண்டு பிறந்தார்கள். 1972 ஆம் ஆண்டு கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் ஆலிம் கற்கையைப் பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை இறைக் காதல் எனும் தலைப்பில் சமர்ப்பித்தார்கள்.
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் 1988 ஆம் ஆண்டு அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக வரலாற்றில் அரபு அல்லாத முஸ்லிம் ஒருவர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
இவர்கள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்கள். உலகப்புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் இவர்கள் உரையாற்றியுள்ளார்கள். தற்போது கட்டார் சர்வதேச பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் துணைப்பீடாதிபதியாகக் கடமையாற்றி வருகிறார்கள். இவர்கள் எழுதிய இஸ்லாமிய சிந்தனை என்ற நூல் துருக்கி மொழியிலும் வெளியானமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இஸ்லாத்திற்காக சேவை செய்து வரும் கலாநிதி தீன் முஹம்மத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்குவானாக.
நன்றி : பஸ்ஹான் நவாஸ்

Sunday 3 May 2015

கலாநிதி ஷெய்க் முஸ்தபா செரிக் (பொஸ்னியாவின் முன்னால் தலைமை முப்தி)


ஷெய்க் முஸ்தபா செரிக் அவர்கள் 1952 பெப்ரவரி 05 இல் யூகொஸ்லாவியா நாட்டில் பிறந்தார்கள். ஆரம்பத்தில் பொஸ்னியா நாட்டிலுள்ள சாரஜிவோ இல் உள்ள பாடசாலையில் கல்வி பயின்று பின்னர் புலமைப் பரிசில் பெற்று எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழத்திற்கு சென்றார்கள். அங்கு கல்வியை முடித்த பின்னர் நாடு திரும்பினார்கள்.

1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்தின் இமாமாக பொறுப்பேற்றார்கள். பல வருடங்கள் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார்கள். பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கற்கை துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றார்கள். பின்னர் மீண்டும் யூகொஸ்லாவியா திரும்பினார்கள்.

அங்கு பொஸ்னியாவின் இஸ்லாமிய சமூக மன்றத்தின் 
(Islamic Community of Bosnia and Herzegovina) தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள். இந்த அமைப்பின் தலைவராக 1993 முதல் 1999 வரை இவர்களே இருந்தார்கள். பின்னர் 1999 ஆம் ஆண்டு பொஸ்னியாவின் தலைமை முப்தியாக நியமிக்கப்பட்டார்கள். 

2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமர் டொனி பிளேயரின் அழைப்பை ஏற்று அங்கு இருக்கும் "டொனி பிளேயர் நம்பிக்கையாளர் மன்றம்" இன் ஆலோசனை சபையில் அங்கத்துவம் பெற்றார்கள்.

கலாநிதி முஸ்தபா செரிக் அவர்கள் பொஸ்னியாவின் விஞ்ஞானம் மற்றும் கலைத்துறைக்கான கற்கை நிலையத்தின் நிறுவனர்களிலும் ஒருவராவார்கள். மற்றும் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய பேரவை, இஸ்லாமிய கற்கைகளுக்கான அஹ்லுல் பைத் மன்றம், யுனெஸ்கொ போன்றவற்றில் அங்கத்துவமும் வகிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் கலாநிதி முஸ்தபா செரிக் அவர்கள் 46 ஆம் இடத்திலுள்ளார்கள்.

கலாநிதி ஷெய்க் முஸ்தபா செரிக் அவர்களின் சில வெளியீடுகள்: 

- Roots of Synthetic Theology in Islam 
- A Choice Between War and Peace 
- A Declaration of European Muslims 
- The challenge of a single Muslim authority in Europe 

கலாநிதி ஷெய்க் முஹம்மத் அபூ பக்கர் பாதீப்

ஷெய்க் முஹம்மத் அபூ பக்கர் பாதீப் அவர்கள் யெமன் நாட்டின் ஹழரமௌத்தில் 1972 ஆண்டு பிறந்தார்கள். இவர்கள் செய்யதினா அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் நிலைக் கல்வியை ஜித்தாவில் உள்ள அல் பலாஹ் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர்கள் யெமன் அல் காப் பல்கலைக் கழகத்தின் ஷரீஆ மற்றும் சட்டக் கல்லூரியில் கலைமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
பின் லெபனான் நாட்டின் பெய்ரூத் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றார்கள். மேலும் இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் இவர்களுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது. ஷெய்க் அபூ பக்கர் பாதீப் அவர்கள் உலகின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களான ஷெய்க் முஹம்மத் அஹ்மத் ஹத்தாத், இமாம் முஹம்மத் அலவி அல் மாலிகி, ஷெய்க் அப்துல் பத்தாஹ், அபுல் ஹசன் அலி நத்வி போன்றவர்களிடம் இஜாஸா எனப்படும் கற்பித்தலுக்கான அனுமதி பெற்றார்கள். ஷெய்க் அபூ பக்கர் பாதீப் அவர்கள் கல்வித் துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்.
யெமன் அஹ்காப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர்கள், தற்போது மக்கா, மதீனா கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராகவும், அதன் எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார்கள். .இது லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும் அல் புர்கான் இஸ்லாமிய மரபுரிமை மன்றத்துடன் இணைந்ததாகும். இஸ்லாமிய பாரம்பரியம், மரபுரிமை ஆகியவற்றுக்கு யெமன் ஹழரமெளத் அறிஞர்கள் வழங்கிய பங்களிப்புத் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
நன்றி : பஸ்ஹான் நவாஸ்