Sunday 3 May 2015

கலாநிதி ஷெய்க் முஹம்மத் அபூ பக்கர் பாதீப்

ஷெய்க் முஹம்மத் அபூ பக்கர் பாதீப் அவர்கள் யெமன் நாட்டின் ஹழரமௌத்தில் 1972 ஆண்டு பிறந்தார்கள். இவர்கள் செய்யதினா அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் நிலைக் கல்வியை ஜித்தாவில் உள்ள அல் பலாஹ் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர்கள் யெமன் அல் காப் பல்கலைக் கழகத்தின் ஷரீஆ மற்றும் சட்டக் கல்லூரியில் கலைமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
பின் லெபனான் நாட்டின் பெய்ரூத் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டதாரியாகப் பட்டம் பெற்றார்கள். மேலும் இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் இவர்களுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது. ஷெய்க் அபூ பக்கர் பாதீப் அவர்கள் உலகின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களான ஷெய்க் முஹம்மத் அஹ்மத் ஹத்தாத், இமாம் முஹம்மத் அலவி அல் மாலிகி, ஷெய்க் அப்துல் பத்தாஹ், அபுல் ஹசன் அலி நத்வி போன்றவர்களிடம் இஜாஸா எனப்படும் கற்பித்தலுக்கான அனுமதி பெற்றார்கள். ஷெய்க் அபூ பக்கர் பாதீப் அவர்கள் கல்வித் துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்.
யெமன் அஹ்காப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர்கள், தற்போது மக்கா, மதீனா கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராகவும், அதன் எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார்கள். .இது லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும் அல் புர்கான் இஸ்லாமிய மரபுரிமை மன்றத்துடன் இணைந்ததாகும். இஸ்லாமிய பாரம்பரியம், மரபுரிமை ஆகியவற்றுக்கு யெமன் ஹழரமெளத் அறிஞர்கள் வழங்கிய பங்களிப்புத் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
நன்றி : பஸ்ஹான் நவாஸ்

No comments:

Post a Comment